Saturday, October 1, 2011

மரங்களும் நானும் (450வது இடுகை)



நிலத்தின் பச்சை இதயங்கள் மரங்கள்!
இரும்பு இதயம் கொண்டவன் நான்!

மரங்கள் இன்றும் சலசல எனத் தன்
தாய்மொழிதான் பேசுகின்றன!
நான் தாய்மொழி பேசினால் கலகல
எனச் சிரிக்கின்றன வளர்ந்த குழந்தைகள்!!

கரியமில வாயுவை உண்டாலும்
உயிர்காற்றைத் தருகின்றன மரங்கள்!
நான் மரங்களை வெட்டினாலும்
கட்டிடங்கள் வளர்த்துத் தருகிறேன்!

வெயிலில் நின்றாலும் மரங்கள்
குளிர்க்காற்றைத் தருகின்றன!
குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு
புவி வெப்பத்தை அள்ளி வழங்குகிறேன் நான்!

மரங்கள்..
மலர், காய், கனி, நிழல் தந்தாலும்
தன்னை விளம்பரம் செய்துகொள்வதில்லை!
அடையாளப்படுத்திக் கொள்ளாமல்
என்னால் வாழமுடிவதில்லை!

மரங்கள் எங்கும் சென்று கல்வி பயில்வதில்லை!
இருந்தாலும் இன்றும்
பறவைகளின் பல்கலைக்கழகமாக
மரங்களே திகழ்கின்றன!
கட்டிடக் கல்விச் சாலைக்குச் சென்றாலும்
எனக்கு அறிவு முதிர்ச்சியடைவில்லை!

நானும் மரமும் என்று
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு
நான் இன்னும் வளரவில்லை!
அதனால்தான் மரமும் நானும்
என்று சொல்லிக்கொள்கிறேன்..

தமிழ் உறவுகளே நான் வாங்கிய பட்டங்களெல்லாம் எனக்கு வேலை மட்டுமே வாங்கிக்கொடுத்தன..
இயற்கைதான் எனக்கு வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுத்தது..

450 வது இடுகை வெளியிடும் இந்த மகிழ்ச்சி நிறைந்த நாளில் வருகைதரும் அன்பு உறவுகளே “இயற்கையைப் பாதுகாப்போம்“ என்னும் சிந்தனையை முன்வைத்து..

நான் விரும்பி எழுதிய சில இயற்கை சார்ந்த இடுகைகளைத் தங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்...







7. இயற்கைக்கும் மனிதனுக்கும் 20/20 


தங்கள் தொடர் வருகைக்கும், 
வாசித்தலுக்கும், 
புரிதலுக்கும், 
பின்தொடர்தலுக்கும்,
அறிவுறுத்தலுக்கும், 
ஆற்றுப்படுத்தலுக்கும், 
கருத்துரைகளுக்கும்...
மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...


!நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00-நன்றி!

முதியோர்தின (சிறப்பு இடுகை)



முதுமை ஒரு வரம்
அது எல்லோருக்கும் வாய்க்காது!

“வயதாகிறதே என்று வருத்தப்படாதீர்கள் அந்தவாய்ப்பு
எல்லோருக்கும் கிடைப்பதில்லை“
என்றொரு பொன்மொழி இருக்கிறது.

கருவுற்ற நிலையிலிருந்து இன்று வரைநாம் எத்தனை தோற்றங்களை இழந்து வந்திருக்கிறோம்..
நாம் நினைத்தாலும் மீண்டும் குழந்தைப் பருவத்துக்குச் செல்லமுடியுமா..?
சரி அதற்காக என்றாவது அழுதிருக்கிறோமா?
நாளும் நாளும் சாகும் நாம் என்றாவது நமக்காக அழுதிருக்கிறோமா?என்று நம்மைச் சிந்திக்கச் சொல்கிறது இந்தப்பாடல்..

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் 
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் 
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி 
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ

குண்டலகேசி -9

உறங்குவது போன்றது இறப்பு
உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு என்கிறார் வள்ளுவர்..
இதனை,
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
என்ற குறள் விளக்கும்.


பிறப்புக்கும் இறப்பும் இடைப்பட்ட இந்த வாழ்க்கையில் இளமை என்பதும் முதுமை என்பதும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை!

மனிதக் காட்சிசாலை!

“விலங்குகள் வந்து
இங்கே மனிதர்களைப் பார்த்துசெல்லும்
இதன் பெயர்
முதியோர் இல்லம்!“

என்னும் கவிதை முதியோர்களுக்கு மனிதவிலங்குகள் தரும் மதிப்பை அடையாளம் காட்டுவதாக அமைகிறது.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதுமையடைந்த பெற்றோர்களை நாளும் நாளும் தெருவில் காணமுடிகிறது.
இது ஒருவகை என்றால்...

இன்னும் நாகரீகமாக பெற்றோருக்கு கடமையாற்றுகிறேன் என்ற பெயரில் “முதியோர் இல்லத்தில்“ சேர்க்கும் உயர்ந்த உள்ளம் படைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உயிரற்ற சிலைகளை வணங்குவதைவிட பெற்றெடுத்த உறவுகளை வணங்குவதல்லவா உண்மையான வழிபாடு!

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.


என்ற வள்ளுவரின் வழிகாட்டலின்படி ஒவ்வொரு மகன்களும் தம் பெற்றோர்களை நல்லபடி பார்த்துக்கொண்டாலே முதியோர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது என் கருத்து.
  
முதுமை என்பது இரண்டாம் குழந்தைப் பருவம் என்கின்றன இலக்கியங்கள்..

குழந்தைகளையே பார்த்துக்கொள்ளமுடியாத இயந்திர மனிதர்களிடம்...
வளர்ந்த குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது அறியாமையுடைய அறிவுரையாகத்தான் எனக்கே தோன்றுகிறது..

இருந்தாலும்... சொல்வது நம் கடமையல்லவா...
சொல்லிவைப்போம்..

முதியோர் தினம் கொண்டாடுவதைவிட
முதியோர்களைக் கொண்டாடவேண்டும் என்று நினைப்பவன் நான்..

இருந்தாலும் முதுமை என்னும் விருதுபெற்ற சாதனையாளர்களுக்கு வாழ்த்துச் சொல்லவிரும்புகிறேன்..

அன்புநிறைந்த வாழ்த்துக்கள் முதியோர்களே!!

இந்த நன்னாளில் முதியோர்கள் உங்களுக்கான சிறப்பு இடுகைகள்..


என்னும் இரு இடுகைகளையும் வழங்கி மகிழ்கிறேன்.

இலக்கியத் திரட்டி