வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

எள் என்றாலும் ஏழாகப் பகுத்து உண்!


பகுத்து உண்டு வாழவேண்டும் என்று சொன்ன நம் முன்னோர்கள்
தனக்கு மீறித்தான் தானமும் தர்மமும் என்றும் சொல்லி்ச் சென்றுள்ளார்கள். அதனால் நாம் இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற குழப்பத்திலேயே இன்றுவரை வாழ்ந்து வருகிறோம்..

இந்நிலையில்..


“எள் என்றாலும் ஏழாகப் பகுத்து உண்“ என்றொரு பழமொழியைக் கேள்விப்பட்டேன் உடனே என் நினைவுக்கு வந்த சங்கப்பாடல் இது..

சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானு நனிபல கலத்தன்மன்னே
5
பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன்மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே
10
அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்ந் தன்றவன்
15
அருநிறத் தியங்கிய வேலே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
இனி பாடுநருமில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லைப்
பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்
20
றீயாது வீயு முயிர்தவப் பலவே.
புறநானூறு 235
அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது.


         சிறிய அளவிளான மது (கள்) கிடைத்தால் அதை எங்களுக்கே தந்து மகிழ்வான்!
பெரிய அளவினையுடைய மது கிடைத்தால் அதனை யாமுண்டு பாட எஞ்சிய மதுவைத் 
தான் விரும்பி நுகர்வான்! 
       சோறு எல்லார்க்கும் பொதுவாதலாற் சிற்றளவினையுடைய சோற்றின்கண்ணும் 
மிகப்பல கலத்தோடுங்கூட உண்பான்
 மிக்க அளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பான்!
 என்போடுகூடிய ஊன்றடியுளதாகிய இடமுழுதும் எங்களுக்கு அளிப்பன்
 அம்போடு வேல்தைத்து உருவும் இடமாகிய போர்க்களமுழுதும் தான் சென்றுநிற்பான்
   தான் காதலிக்கும் கலைஞர்களுக்கு மாலை சூட்டுதலான் நரந்தப்பூ நாறும் 
தன்னுடைய கையால் தான் அருளுடைமையிற் புலால்நாறும் எம்முடைய தலையைத் 
தடவுவான்
   அரிய தலைமையையுடைய பெரிய பாணரது அகலிய மண்டையின்கண் துளையையுருவி 
இரப்பவர் கையுளும் தைத்துருவித் தன்னாற் புரக்கப்படும் சுற்றத்தாரது புல்லிய 
கண்ணிற்பாவை ஒளிமழுங்க அழகிய சொல்லை ஆராயும் நுண்ணிய ஆராய்ச்சியையுடைய 
அறிவினையுடையோர் நாவின் கண்ணே போய் வீழ்ந்தது,   
  அவனது அரிய மார்பத்தின்கண் தைத்த வேல்;  எமக்குப் பற்றாகிய எம்மிறைவன் 
எவ்விடத்துள்ளான் கொல்லோ? இனிப் பாடுவாரும் இல்லை
பாடுவார்க்கு ஒன்றீவாரும் இல்லை; குளிர்ச்சியையுடைய நீரையுடைய துறையின்கட் 
பகன்றையினது தேனைப் பொருந்திய 
பெரிய மலர் பிறராற் சூடப்படாது கழிந்தாற்போலப் 
பிறருக்கு ஒரு பொருளையும் கொடுக்காது மண்ணில் மறைந்துபோவோர் 
மிகவும் பலர்!!

பாடல் வழியே..

1.  பகுத்துண்டு வாழவேண்டும் என்ற கருத்தையும், எள் என்றாலும் ஏழாகப் பகுத்து உண் என்னும் பொன்மொழிகளுக்கும் தக்க சான்றாக வாழ்ந்தவன் அதியன் என்னும் உண்மை புலப்படுத்தப்படுகிறது.


2. பசித்தவர் உண்ண அதுகண்டு பசியாறிய அதியனின் மனிதாபிமானம் இன்று படித்தாலும் கண்முன் நிற்பதாகவுள்ளது.


3. கள்ளானது உணவின் ஒரு அடிப்படைக் கூறாகவே சங்ககாலத்தில் இருந்தது என்பதும். ஆடவரும் பெண்டிரும் மகிழ்ந்து அருந்தினர் என்பதும் அறியமுடிகிறது.


4. அதியன் பெற்ற துன்பம் தான் கொண்டதாகக் கலைஞர்கள் உணரும் அளவுக்கு கலைஞர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவனாக அதியன் விளங்கியமை ஔவையார் அடிகளால் அறிந்துகொள்ளமுடிகிறது.



5. அதியனே சென்றுவிட்டான் இனி இவன் போல கொடை கொடுப்பார் யார் உள்ளார்கள் என்று புலம்பும் புலவரின் குரல் “கையறு நிலையின்“ புலப்பாடாகவே உள்ளது.

தொடர்புடைய இடுகை

ஏழு வள்ளல்களின் சிறப்பு

18 கருத்துகள்:

  1. அகத்தை அழகாக்கும் அழகிய புறநானூறு பதிவொன்று.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. எள் என்றாலும் ஏழாகப் பகுத்து உண்!
    ஒருவரிப் பழமொழியை எவ்வளவு அழகாகப் பொருத்திக் காட்டியுள்ளீர்கள்!

    பதிலளிநீக்கு
  3. கையறு நிலை! ஒளவையார் அதியமான் பற்றி
    பாடலை மிக அழகாக விளக்கியிள்ளீர்
    முனைவரே!
    நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  4. பாடலும் அதன் விளக்கமும் அருமை..நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. நம்மிடம் இருக்கும் உணவு கொஞ்சமேயானாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துண்ணும்போது கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே கிடையாது. அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பழமொழி.
    பகுத்துண்டு வாழ வேண்டும் என்ற சிறந்த கருத்தைக் கூறியிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல பகிர்வு நண்பரே,,,, பாடலும் விளக்கமும்...

    பதிலளிநீக்கு
  8. அழகாய் கருத்துள்ள பதிவு நண்பரே

    பதிலளிநீக்கு
  9. உணவையும் பகிர்வோம்.
    அறிவையும்பகிர்வோம்!

    பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புவோம்....
    என்றெல்லாம் சொல்லி அந்தக் காலங்களின்
    பொது நலன்களை மைய்யமாக கொண்டு
    வாழ்ந்த உயிர்கள் எல்லாம் நிச்சயம் பெருமை பெற்றவர்கள்..

    இன்றைய காக்கைகளே கரைந்துன்னுவதில்லை,
    அப்புறம் ஏன் எண்களை சொல்றீங்க என்ற
    கேள்விக்கணைகளை தொடுக்கும் இந்தக்கால
    சமுதாயம்.
    அதியன் சென்ற பின்னர் ஒளவையின் கையறு நிலையை
    அழகாய் விளக்கியிருக்கிறீர்கள்.
    நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  11. நன்றி சூர்யா
    நன்றி நிரோஷ்
    மகிழ்ச்சி பிரகாஷ்
    நன்றி புலவரே
    நன்றி காந்தி
    நன்றி மாதேவி
    மகிழ்ச்சி பிரகாஷ்

    பதிலளிநீக்கு
  12. உண்மைதான் சென்னைப் பித்தன் ஐயா
    நன்றி எம்ஆர்
    நன்றி சதீஷ்
    புரிதலுக்கு நன்றி கோகுல்
    மகிழ்ச்சி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  13. குடும்பத்தலைவனைப் பிரிந்து துயருறும் மக்கள் போல், அரசனின் பிரிவால் துயருறும் புலவர்களின் நிலையை அழகாகச் சொல்கிறது பாடல். அதியனின் அன்பு, அக்கறை, பகிர்ந்துண்ணும் பாங்கு அத்தனையும் போற்றி நிற்கும் பாடலைப் பகிர்ந்தமைக்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  14. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் கீதா.

    பதிலளிநீக்கு