வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 23 மார்ச், 2009

மனநிலை


(யானை சிறிதாக இருக்கும் போது பாகன் அதன் கால்களில் வலிமையான சங்கிலியைக் கட்டிவிடுவானாம்.யானை அதனை இழுத்து பார்க்குமாம்.அதனால் அதிலிருந்து விடுபட முடியாது.மீண்டும் மீண்டும் இழுத்துப் பார்த்தும் அதனால் விடுபடஇயலாது. அந்நிலையில் இனி நம்மால் விடுபடவே முடியாது என தன் மனதில் முடிவு செய்து கொள்ளுமாம்.பின் அந்த யானை வளர்ந்த பிறகு சாதாரணமான கயிற்றை அதன் கால்களில் பாகன் கட்டிவிட்டாலும யானை அதனை அறுத்துக் கொண்டு செல்ல இயலாது.ஏனென்றால் தன்னால் இச்சங்கிலியை அறுத்துக் கொண்டுசெல்ல இயலாது என அந்த யானை மனதில் முடிவு செய்துவிடுவது தான் காரணம்.இதுவே விலங்கு மனநிலை.)

ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றோடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆற்றறிவு அதுவே அவற்றொடு மனமே.......

(தொல்-பொருள்571–மரபியல்-27) என்பர் தொல்காப்பியர்.
இது உயிர்களின் படிநிலை வளர்ச்சியைக் காட்டுகிறது. ஆறறிவுயிர் என உயர்ந்த நிலையில் மனிதன் போற்றப்படுகிறான்.ஏனென்றால் அவனுக்கு மனம் எனும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் உள்ளது. மனத்தன் என்பது மனிதன் என்றானது. மனிதர்களுள்ளும் விலங்குப் பண்பு உண்டு.

ஒரு கிராமத்தில் ஒரு ஞானி இருந்தார்.அவர் ஊர் நடுவே இருந்து கொண்டு அவரைக் கடந்து செல்லும் மனிதர்களைப் பார்த்து
இதோ பார் நாய் போகிறது.........
இதோ பார் மாடு போகிறது........
இதோ பார் கழுதை போகிறது.......
என கூறுவாறாம் அதற்காகவே அஞ்சிக் கொண்டு அவ்வழியே மக்கள் செல்வதில்லையாம். ஒரு முறை அந்த ஊருக்கு இராமலிங்க வள்ளலார் வந்தாராம். அந்த ஞானி இருந்த தெருவைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது . வள்ளலாருடன் வந்தவர்களும், ஊராரும் வள்ளலாரிடம் அவ்வழியே செல்லவேண்டாம் அந்த ஞானி எல்லோரையும் விலங்குகளின் பெயர் சொல்லித் திட்டுகிறார் வேறு வழியே செல்லலாம் என்றார்கள்.
ஆனால் வள்ளலாரோ சற்றும் சிந்திக்காது அவ்வழியே சென்றார்.அந்த ஞானியைக் கடக்கும் போது அந்த ஞானி வள்ளலாரைப் பார்த்து இதோ பார் மனிதன் செல்கிறான் என்றாறாம். ஊர்மக்கள் எல்லோரும் வியந்து போனார்களாம்.இந்த ஞானி இதுவரை யாரையும் மனிதன் என அழைத்ததே இல்லையே இவரை மட்டும் ஏன் மனிதன் என்று அழைக்கிறார் என சிந்தித்தார்களாம்.

இது வள்ளலார் பற்றி வழக்கிலிருக்கும் கதை இக்கதை உணர்த்தும் நீதி மனிதர்களாகப் பிறந்துவிட்டால் மட்டும் அவர்கள் மனிதர்களாக ஆகிவிட முடியாது.மனிதத்தன்மையோடு வாழ்ந்தால் மட்டுமே மனிதர்கள் என மதிக்கப்படுவார்கள்............

எல்லா மனிதர்களுக்குள்ளும் விலங்குத்தன்மை இருக்கும் அதனை அறிந்து கொள்வதும்.அத்தன்மையிலிருந்து விடுதலை அடைவதுமே நம்மை மனிதர்களாக வாழச்செய்யும் பண்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக