வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 2 மார்ச், 2009

அணிலாடு முன்றிலார்





தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலை கண்டு தோழி வருந்துகிறாள். இந்நிலையில் தலைவி தன் மனநிலையை எடுத்துரைக்கிறாள்.

தோழி, தலைவன் என் அருகில் உள்ளபோது, மிகவும் மகிழ்ந்து விழாநடக்கும் பேரூர் போல உள்ளேன். ஆனால் அவர் என்னை நீங்கிய போது பாலை நிலத்தில் காணப்படும் குடிகளில் உள்ள சீறூர்களில் உரைவோர் யாவரும் நீங்கிய பின்னர் “அணில் விளையாடும் முற்றத்தைப் போல“ தனிமை கொண்டவளாக பொலிவிழந்து வருந்துகிறேன் என உரைக்கிறாள். இதனை,

“காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் – தோழி – அவர் அகன்ற ஞான்றே.
குறுந்தொகை-41
எனும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

காதலன் தன்னுடன் உள்ளபோது சீறூரில் வாழ்ந்தாலும், அதனையே விழா நடைபெறும் பேரூராக எண்ணிக்கொள்ளகிறாள் தலைவி. அதே நேரம் அவன் தன்னைப் பிரிந்தபோது மக்கள் நீங்கிய அணில் விளையாடும் தனியான முற்றத்தைப் போலப் பொலிவிழந்து காணப்படுகிறேன் என உரைக்கிறாள்.
இப்பாடலில் தலைவியின் மனநிலையை “அணிலாடு முன்றில்“ என்னும் சொல் நயமுறக் காட்டுகிறது. இப்பாடலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியாத நிலையில் இத்தொடரையே அவர்தம் பெயராக “அணிலாடு முன்றிலார்“ என இட்டு மகிழ்ந்து வருகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக