உள்ளடக்கம்

141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) அகத்துறைகள் (26) அகநானூறு (4) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (3) இணையதள தொழில்நுட்பம் (17) உளவியல் (2) கருத்தரங்க அறிவிப்பு (7) கலித்தொகை (4) கலை (1) கவிதை (3) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (4) குறுந்தொகை (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (15) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (10) சங்கத்தமிழர் அறிவியல் (2) சங்கப் புலவர்களின் 473 பெயர்கள் (1) சிந்தனைகள் (5) சிறுபாணாற்றுப்படை (1) தமிழாய்வுக் கட்டுரைகள் (12) தமிழின் சிறப்பு (1) தமிழ் அறிஞர்கள் (1) தமிழ்த்துறை (1) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (18) தொல்காப்பியம் (1) தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை முழுவதும்.. (1) தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை.. (1) தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை..... (1) நட்சத்திர இடுகை (2) நற்றிணை (9) நெடுநல்வாடை (1) நோக்கு ( நூறாவது இடுகை ) (1) பட்டமளிப்பு விழா............... (1) பாராட்டுவிழா (1) புறநானூறு (10) பெண்களும் மலரணிதலும் (2) மனதில் நின்ற நினைவுகள் (9) மலைபடுகடாம் (1)

09 November, 2009

சங்க இலக்கியத்தில் இசைமருத்துவம்



இசை உயிர்களை இசைய வைப்பது. இசைக்குள் எல்லா உயிர்களும் அடங்கும். இசைமருத்துவம் என்னும் துறை இன்று வளர்ந்து வரும் துறைகளுள் ஒன்றாகும். இசையால் இரத்த அழுத்தம் முதல் நரம்பியல் தொடர்பான நோய்கள்கூட குணமாகின்றன என்று இன்றைய அறிவியல் உரைக்கிறது.
நியூரான்களின் தொகுப்பே மூளை. இசையால் உண்டாகும் மின்னலைகள் உடலில் உள்ள உயிர்வேதி மின்னலைகளுடன் ஒத்துப்போகின்றன. அதனால் உடலில் பல மாற்றங்கள் உருவாகின்றன. இந்த மாற்றத்தையே நாம் இசைதல் என்கிறோம்.

சங்ககால இசையறிவு
சங்ககால மக்கள் இசைத்துறையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர். குறிஞ்சிப்பண், பாலைப்பண், மருதப்பண், படுமலைப்பண், விளரிப்பண், காமரப்பண், ஆம்பல் பண் எனப் பல்வேறு பண்களையும் காலை, மாலை எனப் பொழுதறிந்து இசைத்து மகிழ்ந்தனர். நரம்பு, துளை, தோல,; கஞ்சம் என நான்கு வகையான இசைக்கருவிகளோடு குரலாலும் இசைத்து மகிழ்ந்தனர்.
இசைக்கு மயங்கும் உயிர்கள்
சங்க இலக்கியங்களின் வழி புள்ளினங்கள், விலங்கினங்கள் இசைக்கு மயங்கிய தன்மைகளையும் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.. யானை யாழோசைக்குக் கட்டுப்பட்டதை,

‘காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரைத் தாங்கியாங்கு’ (கலித்தொகை-2-26-27)


யானைப் பாகனின் குத்துக்கோலுக்கு அடங்காத யானைகூட யாழின் இனிமையான இசைக்கு மயங்கியமை புலப்படுத்தப்படுகிறது.


செந்நாய்க்கு அஞ்சிய கலைமான் இன்னிசை கேட்டு அச்சம் நீங்கியதை,

‘ செந்நாய் வெரீஇ புகர்உழை ஒருத்தல்
போரி அரை விளவின் புண்புற விளை பூசல்
அழல் எறி கோடை தூக்கலின் கோவலர்
குழல் என நினையும் நீர் இல் நீர்இடை’ அகநானூறு-219-13-16


இவ்வடிகள் உணர்த்தும்.
செந்நாய்க்கு அஞ்சிய கலைமான், விளாம்பழ ஓட்டின் துளை வழியே வரும் வெப்பமான காற்று இனிய ஓசையோடு வருவதைக் கேட்கிறது. அவ்வோகை கோவலரின் குழலோசை என்றே கருதுகிறது. அதனால் அச்சம் நீங்குகிறது என்பர் கயமனார்.

இசையின் இனிமையில் மயங்கிய கிளிகளைப்பற்றி,

‘படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன்பாணித்தே
கிளி அவள்விளி என விழல் ஓவாவே
அது புலந்து அழுத கண்ணே.’ குறுந்தொகை-291-2-4
இப்பாடல் சுட்டுகிறது. தினைகளில் விழும் கிளிகளை விரட்டச்சென்றாள் ஒரு தலைவி. குளிர் என்னும் இசைக்கருவியால் இசைத்து ஒலி எழுப்பினாள். அங்கு வந்த கிளிகளோ குளிர் என்னும் இசைக்கு மயங்கின.
தலைவியின் குரலைத் தம் இனத்தின் குரலே என்று எண்ணிய கிளிகள் வேறிடம் செல்லாது அங்கேயே தங்கின. அதனால் வருந்திய தலைவி அழுதனள் இதையே இப்பாடலடிகள் சுட்டுகின்றன. இப்பாடலில் இசைக்கு கிளிகள் மயங்கியமை குறிப்பிடப்பட்டுள்ளது.

அசுணமா என்னும் உயிரியை யாழிசைத்து வரவழைப்பதையும் பின் அதனைப் பறையறைந்து கொன்றதையும் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐந்தறிவு உயிரினங்களையே மயக்கும் இசை ஆறறிவு படைத்த மனிதனை மேலும் மயக்குவதாக இருந்தது. மனிதன் தான் விரும்பிய இசையை மீண்டும் மீண்டும் இசைத்து மகிழ்ந்தான்.

கொடிய மனம் கொண்ட ஆறலைக்கள்வரையும் மயக்கும் தன்மை இசைக்கு இருந்தது என்பதை

“ஆறலைக் கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை (பொருநர்-21-22)

என்பர் முடத்தாமக்கண்ணியார்.

புறவாழ்வில் போரில் இசை பெரும்பங்கு வகித்தது. போரின் தொடக்கத்தையும் முடிவையும் அறிவிப்பதே இசையாக இருந்தது. போரில் எந்த நாட்டு மன்னன் வெற்றிபெறுகிறான் என்பதைத் தெரியப்படுத்துவது இசையே. வென்ற மன்னன் தோற்ற மன்னனின் முரசைக் கிழிப்பதை மரபாகக் கொண்டிருந்தான்.அரண்மனையில் முரசுகட்டில் இருந்தது.
போரில் முழங்கும் முரசு வீரர்களின் மனதில் ஊக்கத்தை அளிப்பதாக இருந்தது. சான்றாக,
“ பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
அது போர் என்னும் என்ஐயும் உளனே’ புறநானூறு-89-7-9
இவ்வடிகளில் காற்றின் காரணமாக ஒலியெழுப்பியது தண்ணுமை. அவ்வொலி போரின் அறிவிப்பொலியே என்று ஐயம்கொண்ட வீரனின் நிலை சுட்டப்பட்டுள்ளது.
இதனால் இசை அக்காலத்தில் எந்த அளவுக்கு மனதில் ஊக்கத்தையும் சிந்தனையையும் தூண்டுவதாக அமைகிறது என்பது புலனாகும்.

சங்க இலக்கிய இசை மருத்துவக் கூறுகள்.

சங்கப் பாடல்கள் சுட்டும் பல கருத்துக்கள் இன்றைய இசைமருத்துவம் சுட்டும் கூறுகளுடன் ஒத்துப்போகின்றன. இதனை
“தீம்கனி இரவமொடு வேம்பு மனை செரீ
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க
இசைமணியெறிந்து காஞ்சிபாடி“ புறநானூறு-281-1-5
இப்பாடலில் போரில் புண்பட்ட வீரனின் புண்னை ஆற்றவும் அவன் வலியின்றி இருக்கவும் காஞ்சிப்பண் பாடியமை சுட்டப்படுகிறது.
இசை வலியைக் குறைக்கும் என்ற அறிவு அன்றைய மக்களுக்கு இருந்தமை இதனால் அறியலாம் . இதனை மேலும் ஒரு சான்று வாயிலாகவும் அறியமுடிகிறது.
“ கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார்க் காப்பென
அறல்வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்’ மலைபடுகடாம்-302-304.
இவற்றால் உடலில் ஏற்பட்ட வலி குறைய பழந்தமிழர்கள் இசையை மருந்தாகப் பயன்படுத்தியமை புலனாகிறது.

வள்ளைப்பாட்டு

குறமகளிர் தினை குற்றும் போது பாடும் பாடல் வள்ளைப்பாட்டு ஆகும்.
இதனை,
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளை (மலைபடுகடாம்-343)
பாவடி உரல பகுவாய்வள்ளை (குறுந்தொகை-89-1)
ஆகிய அடிகள் உணர்த்தும். வள்ளைப்பாட்டு என்பது மகளிரின் மன அழுத்தம் நீக்கும் ஒருவகையான இசைமருத்துவமாகவே அறியமுடிகிறது.

வெறியாட்டு


தலைவியின் உடல்வேறுபாடு கண்டு நிகழ்த்தப்படும் வெறியாட்டு ஒரு வகையான இசைமருத்துவமாகவே அன்று நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதனை,
‘கூடுகொள் இன்னியம் கறங்க
ஆடுஅணி அயர்ந்த அகன் பெரும்பந்தர்
வெண்போழ் கடம்பொடு சூடி இன்சீர்
ஐது அமை பாணிஇரீஇ’ (அகநானூறு-98-14-17)
‘அருங்கடி வேலன் முரகொடு வளைஇ
அரிக்கூட்டு இன்னியம் கறங்க’ (மதுரைக்காஞ்சி611-612)
இவ்வடிகள் வழியாக வெறியாட்டில் இசை மைய ஆற்றலாக விளங்கியமை உணர்த்தப்படுகிறது. தன்னைப் பற்றி ஊரார் பேசும் அலரால் ஏற்பட்ட மன அழுத்தமே தலைவியின் உடல்வேறுபாட்டுக்கு அடிப்படைக் காரணமாகும்.இசை இந்த மனஅழுத்தத்தைப் போக்குவதாக அமைகிறது


நிறைவுரை..


• மக்களுக்கு வரும் நோய்களை உடல் தொடர்பானவை, மனம் தொடர்பானவை என இருநிலைகளில் பகுக்கலாம். மனம் தொடர்பான நோய்கள் மன அழுத்தம் காரணமாகவே தோன்றுகின்றன. உடல் தொடர்பான நோய்கள் பலவிதங்களில் வருகின்றன.
• இசை இவ்விருவகை நோய்களுக்கும் தக்க மருந்தாக அமைகிறது. மன அழுத்தம் நீங்கி மனதைத் தன்வயமாக்கும் ஆற்றல் கொண்டதாக இவ்விசை விளங்குகிறது.
• இசை உடலில் உள்ள உயிர்வேதி மின்லைகளோடு ஒத்துப்போவதால் புத்துணர்வளிப்பதாகவும் இசை அமைகிறது. இதனை இன்றைய மருத்துவவியலார் நன்கு உணர்ந்துள்ளனர். மேலை நாடுகளில் மிகவும் புகழ்பெற்றதாக இந்த இசை மருத்துவ முறை விளங்குகிறது. சங்ககாலத்திலேயே இசையின் தன்மையை உணர்ந்து சங்ககாலமக்கள் பயனறிந்து இசைத்து மகிழ்ந்தமை இலக்கியங்கள் வழி அறியும் போது வியப்பாக உள்ளது.
• பாகனுக்கு அடங்காத யானை யாழிசைக்கு அடங்கியதையும்,
• கிளிகள் யாழிசைக்கு மயங்கியதையும்,
• அசுணமாவை யாழிசைத்து வரவழைப்பதையும் பறையறைந்து கொல்வதையும், சங்கப்பாடல்கள் சுட்டுகின்றன.
• கொடிய மனம் கொண்ட ஆறலைக்கள்வரையும் இசையவைக்கும் தன்மை இசைக்கு இருந்தது என்ற சங்ககால மக்களின் இசையறிவு இசையின் பயனை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதையே உணர்த்துகின்றது.
• போரில் புண்பட்டவர்களுக்கும். வேட்டையாடி புண்பட்டவர்களுக்கும் இசை இசைத்து அவர்களின் வலிபோக்க எண்ணியமை பாடல்கள் வழி அறிகிறோம். இசை காயத்தை ஆற்றும், வலியைக்குறைக்கும் என்ற அவர்களின் இசைமருத்துவ அறிவு எண்ணி இன்புறத்தக்கது.
• வெறியாட்டு, வள்ளைப்பாட்டு ஆகிய இரண்டும் சங்க காலப் பெண்டிரின் மன அழுத்தம் நீக்கும் அடிப்படைக் காரணியாகத் திகழ்ந்தமை சங்கப்பாடல்கள் வழி அறிகிறோம். இவ்விரு நிகழ்வுகளிலும் இசை மைய ஆற்றலாக விளங்குகிறது.
சங்க கால மக்கள் இசையின் பயனை நன்கு அறிந்திருந்தனர். அதனை தம் வாழ்வில் ஒரு கூறாக போற்றினர் என்பதற்கு சங்க இலக்கியங்களே சான்றாக உள்ளன. மனிதர்கள் மட்டுமன்றி விலங்கினங்கள், புள்ளினங்கள் கூட இசைக்கு மயங்கும் என்ற குறிப்புகள் வழி அக்கால மக்களின் இசைநுகர்ச்சியை அறியலாம். இசை நோயைக் குணப்படுத்தும், வலியைக் குறைக்கும் என்ற அவர்களின் சிந்தனை அவர்களின் இசைமருத்துவ அறிவை உணர்த்துவதாகவே உள்ளது.

Read more...

05 November, 2009

பசிப்பிணி மருத்துவன்..




உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு (குறள்-734)

பசி, பிணி(நோய்), பகை இவையின்றி இருப்பதே நல்ல நாடு என்பர் வள்ளுவர். இம்மூன்றும் இல்லாத நாடு எது? என்பதே எல்லோருக்கும் தோன்றும் கேள்வி..

சங்க காலத்திலும் பசியிருந்தது…
பசி என்னும் வயிற்றுத் தீயை தணிக்கும் நீராக அக்கால அரசர்கள் இருந்தார்கள்.
வறுமையும் புலமையும் சேர்ந்தே பிறந்ததால் பசியோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் இரவலர்களுக்கு உண்டி கொடுத்து உயிர் கொடுத்தவர்களாக அக்கால மன்னர்களும் வள்ளல்களும் விளங்கினர்..

இரவலர்களுக்கு புரவலர்கள் உணவளித்துப் பசியைப் போக்கியதையே ஆற்றுப்படை இலக்கியங்கள் இயம்புகின்றன. இரவலர்களின் பசிப்பிணியைப் போக்கியதால் புரவலன் “பசிப்பிணிமருத்துவன்“ என்றழைக்கப்பட்டான்.

பசிப்பிணி மருத்துவர்கள் குறைந்துவிட்டதால் தான் பசி… பசி.. பசி.. என்னும் கூக்குரல் ஓயாது கேட்டுக்கொண்டே இருக்கிறது.

பண்ணனிடத்துப் பரிசில் பெறப்போகும் பாணன், பரிசில் பெற்றுவரும் பாணனை வினவுவது போல அமைந்த புறநானூற்றுப் பாடல் சங்க காலத்தில் பசியின் கொடுமையையும் பசிப்பிணி மருத்துவர்களின் சேவையையும் இயம்புவதாக அமைகிறது.

“மரம் பழுத்துவிட்டால் புள்ளினங்கள் கூடி பழத்தை உண்டு ஆரவாரம் செய்வது இயல்பு. அந்த ஆரவாரரம் போல “ பண்ணன்“ என்னும் வள்ளலின் அரண்மனையில் இரவலர்கள் ஊண் உணவை உண்டு மகிழ்ந்து பேராரவாரம் செய்த ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.

பழுக்காத மரத்தையும், ஈயாத செல்வரையும் தேடி யாரும் செல்வதில்லையே… இரவலரின் பசிப்பிணியைத் தீர்ப்பவன் பண்ணன் என்பதால் இவ்வொலி கேட்டுக்கொண்டே இருந்தது.

எறும்புகள் மழை வருவதை உணர்ந்து தம் முட்டைகளைச் சுமந்து மேட்டுப்பாங்கான பகுதிகளுக்குச் செல்வது போல, உணவுண்ட கையினைக் கொண்டவராக சுற்றத்தாரோடு சிறுவர்கள் சென்றனர். அவர்களைக் கண்டும்,
பசி வருத்தத்தாலும்,
வழி நடந்த வருத்தத்தாலும்,
மென் மேலும் பெருவிதுப்புற்றவர்களாக இருக்கும் இரவலர்கள் (பாணர்கள்) பரிசில் பெற்றுவரும் இரவலர்களைக் கண்டு கேட்டனர்…..


பசி என்னும் நோய் தீர்க்கும் மருத்துவனாகிய பண்ணனின் இல்லம் பக்கமா..? தூரமா..?

பாணர்களின் பசியென்னும் நோயைத் தீர்ககும் “பண்ணன்“ நான் வாழும் நாளையும் சேர்த்து வாழ்வானாகுக என்று பரிசில் பெற்ற பாணனை நோக்கி பெறவிரும்பும் பாணன் வினவுகிறான்..
பாடல் இதோ…

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர் ! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்;
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே,“


173. யான் வாழுநாள் வாழிய!
பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

எல்லா சமயத்தாரும் “விரதம்“ என்னும் பட்டினி கிடப்பதைக் கடைபிடிக்கின்றனர். அதன் உண்மையான நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே…!

விரதம் இருப்பதன் உண்மையான நோக்கம் தான் என்ன..?
பசி என்றால் என்ன..?
பசித்தவன் வலி என்ன..?
வயிற்றில் தீ எறிவது போன்ற பசியோடு அவன் படும் பாடு என்ன….?
என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே கடவுளின் பெயரால் விரதம் இருப்பதால் என்ன பயன்..?

நமக்கும் பசிப்பது போலத் தானே பசித்தவனும் வலியுணர்வான் என்பதை உணர்தாலே நாமெல்லாம் பசிப்பிணி மருத்துவர்களாகிவிடுவோம்.

Read more...

04 November, 2009

உளறிக்கொட்டிய உண்மை…




குற்றவாளிகள் பொய்பேசுகிறார்களா என்று கண்டறிய “ உண்மை கண்டறியும் கருவிகளைப்“ பயன்படுத்துகிறார்கள்….

குற்றவாளிகளிடமிருந்து உண்மையை வரவழைக்க இப்னாடிசம் என்னும் மனவியல் உத்திகளைக் கையாள்கிறார்கள்.

இணைய அரட்டைகளில் பொய்யான நாடு, ஊர், பெயர் என ஏமாற்றும் நிலை அதிகரிப்பதால் அரட்டையடிப்பவர் பேசுவது உண்மையா? பொய்யா? என்று கண்டறியவதற்கெல்லாம் மென்பொருள்கள் வந்துவிட்டன.

எதிர்காலத்தில் நாம் பார்க்கும் சராசரி மனிதர்கள் பேசுவது உண்மையா பொய்யா என்பதைக் கண்டறிவதற்குக் கூட கருவிகள் வந்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

குழந்தைகள் பொய் பேசுவதை எளிதில் கண்டறிந்துவிடலாம். அவர்வளின் கண்களே அவர்கள் பொய் பேசுகிறார்கள் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும்…

உலகமே நாடக மேடை என்பதால் எல்லோரும் நடிகர்களாகிவிட்டார். எல்லோரும் நடிகர்களாகிவிட்டதல் எல்லோரும் பொய் பேசுவது தவிர்க்க இயலாததாகிவிட்டது.

இவர்களெல்லாம் எப்போது தான் உண்மை பேசுவார்கள்..?

தூக்கத்தில் உளறும் போது உண்மைதான் பேசுவார்கள் என்று நினைக்கிறேன்…

ஏனென்றால் வாய் பொய் பேசும்.ஆழ்மனமும், கண்ணும் உண்மை தான் பேசும்


இங்கு ஒரு தலைவியின் ஆழ்மனத்திலிருந்த உண்மையை அவள் விழித்திருக்கும் போதே உளறிக்கொட்டிய அழகிய காட்சியை கொள்ளம்பக்கனார் என்னும் சங்கப்புலவர் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்…

பாடல் இதோ



யாங்கு ஆகுவமோ-'அணி நுதற் குறுமகள்!
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல்
செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று
எவ் வாய்ச் சென்றனை, அவண்?' எனக் கூறி,
5 அன்னை ஆனாள் கழற, முன் நின்று,
'அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே;
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து,
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை
10 பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு,
தலை இறைஞ்சினளே அன்னை;
செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே?

நற்றிணை - 147. குறிஞ்சி
- கொள்ளம்பக்கனார்


பாடலின் பொருள்….

(தலைவன் தலைவியை மணம் செய்துகொள்ளும் எண்ணமின்றி களவுக் (காதல்) காலத்தையே நீட்டிக்க வேண்டும் என்று எண்ணுகிறான். தோழியோ தலைவன் தலைவியைக் காண அருகே வந்து மறைந்திருக்கும் போது அவன் கேட்குமாறு, தலைவியின் அறியாமையும் அதனால் அவள் காதல் பெற்றோர் அறிந்து கொண்டதையும் உணர்த்தினாள்..

இதனைக் கேட்கும் தலைவன்….
தலைவியின் காதல் அவள்தம் பெற்றோர் அறிந்தால் தலைவி இற்செறிக்கப்படுவாள் (வீட்டுக்காவல்) என்பதை அறிந்து விரைவில் மணம் செய்து கொள்ள முற்படுவான்…)

தலைவி உளறிக் கொட்டிய உண்மை…


தோழி : தோழி….. அன்னை உன்னிடம்,“ அழகிய நெற்றியையுடைய இளமகளே!
இடமகன்ற மலைச்சாரலில் அமைந்தது நம் தினைப்புனம். அதில் வந்தமரும் கிளிகளை விரட்டாது எங்கு சென்றாய்….?
என்று தானே கேட்டாள்.

தலைவி : ஆமாம்..

தோழி : அதற்கு நீ என்ன சொன்னாய்…?

தலைவி : அத ஏன்டி கேட்கிற…

அருவி முழங்கும் மலைநாடனை நான் காதாலும் கேட்டறியேன்.
கண்ணாலும் பார்க்கவில்லை.
மலர்ந்த பூக்களைப் பறித்து அவனோடு சுனையில் நீராடவும் இல்லை
என்று நடந்த உண்மையை உளறிகொட்டிவிட்டேன்…

தோழி : இவ்வளவு அறியாமை உடையவளாகவா இருப்பாய்..?
நீ இப்படியிருந்தால் நீ எவ்வாறு குடும்பம் நடத்துவாய் என்று ஊரார் பேசமாட்டார்களா..?
சரி! அதற்கு உன் தாய் என்ன சொன்னாள்…?

தலைவி : சினத்துடன்…
தலைகுனிந்தவாறே சென்றுவிட்டாள்..!

தோழி : ஆம்! அவள் என்ன செய்வாள்…
ஊரார் அலருக்கு அஞ்சி தலைகுனிந்து சென்றிருப்பாள்..
இனி நீ “ இற்செறிக்கப்படுவாய்”

இவையெல்லாம் தலைவன் அறிந்து உன்னை விரைவில் மணம் செய்து கொள்ளவேண்டும்.

இப்பாடலில்….
தலைவனைத் தலைவி எப்போதும் மறந்திலள் என்பதனைக் குறிக்க, பொய் சொல்ல வேண்டிய சூழலிலும் உண்மை சொன்னாள் என்பது சுட்டப்பட்டது..
இதில் தலைவியின் காதலின் ஆழம் உணர்த்தப்பட்டது….

பொய் கூற வேண்டிய இடத்தும் உண்மை கூறியதால் அவளின் அறியாமை புலப்படுத்தப்பட்டது.

Read more...

02 November, 2009

2500 ஆண்டுகளாய் தீராத சண்டை…




தெருவில் ஒரு சின்ன பையன் ஒரு சின்னப் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து விட்டு ஓடினான். அந்தப் பெண் அவன் பின்னேயே ஓடிச் சென்று அவன் முடியைப் பிடித்து இழுத்தால் இவர்களின் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்த அவர்களின் பெற்றோர் அவர்களைத் தடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இது போன்ற காட்சிகளை இன்றும் உங்கள் அருகாமையில் பார்க்கமுடியும்.

2500 ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்துக்குச் செல்வோம்….

தலைவன், தலைவியை அவள் பெற்றோர் அறியாது மணம் செய்து கொள்வதற்காக அழைத்துச் செல்கிறான். இதற்கு “உடன் போக்கு“ என்று பெயர். இடைச்சுரத்தில் இவர்களைக் காண்போர் “கண்டோர்“ என்றழைக்கப்பட்டனர். அவர்கள்,
இளமைப்பருவத்தில் இந்த தலைவனும் தலைவியும் நிகழ்த்திய விளையாட்டினை நினைவு கூர்ந்தனர்.

தெருவில் விளையாடும் போது, இவளுடைய ஐவகையாக முடிக்கப்பட்ட கூந்தலை இவளறியாதவாறு இவன் பிடித்து இழுப்பான். அதனை அறிந்த இவளோ அவனுடைய முடியைப் பிடித்து இழுத்துக்கொண்டே அவன் பின் ஓடுவாள்.“

இவ்வாறு தம்முள் அயலாரைப் போல பகைமை கொண்டு எப்போதும் சண்டையிட்டுக்கொள்ளும் இவர்களை இடைமறித்து இவர்கள் மீது அன்பு கொண்ட செவிலியர் அழைத்துச் செல்வார்கள். இனி அந்த சண்டை தீர்ந்தது. இனி இவர்களுக்குள் சண்டையே வராது.

மெல்லிய காம்புகளைச் சேர்த்து, இரட்டையாகச் சேரத்தொடுத்த மாலையைப் போல இப்போது இவர்கள் ஒரு மாலையில் இணைந்த இரு பூக்கள் போல வாழ நல்வழி காட்டியதால் விதியே நீ நல்லை எனப்படுவாய் என்று தலைமக்களின் தோற்றம் கண்டு கண்டோர் கூறுகின்றர்.


பாடல் இதோ

229. பாலை
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறு செரு உறுபமன்னோ!
நல்லை மன்றம்ம பாலே-மெல் இயல்
துணை மலர்ப் பிணையல் அன்ன இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.
மோதாசனார்


இளமைக் காலத்தில் உடம்பால் நீங்காது பகை விளைவித்துக்கொண்டிருந்த இவர்கள் உள்ளத்தாலும் நீங்காதவாறு நட்பு விளைவித்த ஊழ்வினையே நீ நல்லை என்று கண்டோர் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

2500 ஆண்டுகளாகிவிட்டது…..


இன்றும் குழந்தைகளின் சண்டை தீரவி்ல்லை…...
காதல் தீரவில்லை……...
ஊழ்வினை என்னும் விதி பற்றிய நம்பிக்கையும் தீரவில்லை..
தீரவும் தீராது….



இன்னும் 2500 ஆண்டுகள் கழித்தும் இது தொடர்ந்து வரும்..

ஏனெனில்….

குழந்தைகளின் வயது அவர்ளைச் சண்டையிடச் செய்கிறது…
தலைமக்கள் வயது அவர்களைக் காதலிக்கச் சொல்கிறது…
இதைப் பாரக்கும் கண்டோர் வயது…
இதற்குக் காரணம் விதி என்று சொல்ல வைக்கிறது…

ஆம்..
உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களே விதி என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.

எந்த விலங்கும் காதலுக்காக மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்வதில்லை..
மனிதன் மட்டுமே காதலுக்காக உயிரைக் கூடக் கொடுக்கிறான்.

பரிணாம வளர்ச்சியில் மனிதமூளையில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்குக் காரணம்..

Read more...

31 October, 2009

தீண்டாய் மெய் தீண்டாய்





ஏ.ஆர்.ரகுமான் இசையில் என்சுவாசக் காற்றே என்று ஒரு படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அதில் தீண்டாய் மெய் தீண்டாய் என்று ஒரு பாடல் இடம் பெற்றது. அந்தப்பாடலின் தொடக்கத்தில்……….

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீ்ம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

(குறுந்தொகை-27)

பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

(தலைவனின் பிரிவைத் தலைவி தாங்கமாட்டாள் என்று வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது)

என்று ஒரு பாடல் இடம் பெற்றது. அந்தப்பாடல் சங்கஇலக்கியத்தில் இடம்பெற்ற குறுந்தொகை என்பது பலருக்குத் தெரியாது.

இந்தப்பாடலின் பொருள்…

தலைவனின் பிரிவைத் தலைவி ஆற்றாள் என்று வருந்தினாள் தோழி. தலைவியோ நான் ஆற்றியிருந்தாலும் என் அழகு எனக்கும் உதவாது என் தலைவனுக்கும் உதவாது பசலையால் அழிந்து போகிறதே என்று வருந்துகிறாள்.

நல்ல பசுவின் இனிய பால், அப்பசுவின் கன்றும் உண்ணாது, பசுவுக்குச் உரிமையாளர்களுக்கும் பயன்பாடாமல் மண்ணில் சிந்தி அழிந்தது போல, என் அழகு எனக்கும் பயன்படாது என் தலைவக்கும் பயன்படாது பசலையால் விரும்பி உண்ணப்படுகிறதே என்று வருந்துகிறாள் தலைவி.“


இதுவே பாடலின் பொருள்..

இவ்வினிய பாடலே ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருமாறியது.

தமிழ்த்திரைப்படப் பாடல்களில் சங்க இலக்கியத்தின் தாக்கம் நீண்ட நெடிய நாட்களாகவே இருக்கிறது. கண்ணதாசன், வைரமுத்து, தொடங்கி இன்றைய கவிஞர்கள் வரை இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று…..

வேர் எது?
விழுது எது?

என்ற தெளிவு
!

திருக்குறளை எழுதியவர் சாலமன் பாப்பையா..
என்று கூறுமளவுக்கு ஒரு தலைமுறை உருவாகியுள்ளது..
அவர்களுக்கு வேர் எது விழுது எது என்ற மயக்கத்தைப் போக்கி…..

வேர் சங்க இலக்கியம்
விழுது இன்றைய கவிதைகள்


என்பதைப் புலப்படுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது…

Read more...
Blog Widget by LinkWithin

Followers

About This Blog

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP